Monday, April 2, 2012

ஓய்வு பெற்றவரின் கண்ணீர்

வார்த்தை வலிகள் 
கொடுத்திருப்பேன் 
நேசித்ததில் 
நிறைகுறைகள் கண்டும் 
நெஞ்சத்து அன்பு 
குறைக்கவில்லை நீ 

உழைப்புக்கு நீ 
ஒத்துழைப்பு நல்கியதில்
பாச மகவுகள் 
படிப்படியாய் 
வளர்ந்தனரே 

நிறைகுறைகள் 
வாழ்வில் நீங்கா 
நின்ற போதும் 
தோள் கொடுத்தாய் 
கல்வி ஏணி ஏறி
கரை சேர்ந்தனர் 
பிள்ளைகள் 

நிலை உயர்வு பெற்ற
மகவுகளுக்கு
மணமும் முடித்து
மகிழ்ந்த வேளையில் 
உன் மனக்குரங்கு 
வன்மம் கொண்டதேன் 

ஒத்துழையாமை 
ஆயுதம் ஏந்தினாய் 
அத்துணையும்
குற்றமென்றாய்
அடிமனது வலி 
என்று அரற்றினாய் 

உட்கார்ந்து பேசவும் 
உடன் படாததேனோ 
இருதலைக் கொள்ளி
எறும்பின் நிலை 
யாரிடமும் எதுவும் 
உரைக்க இயலாது 
ஏற்ற வாழ்வு 
அணை போட

ஓய்வு ஆய்வுக்குறியாகி
சாய்வுக்கு 
தோளில்லா நிலை 
வளமான வாழ்விருந்தும் 
குளம்நிறை சேறாகி 
தளமே ஆடுகிறது 

வேதனைகளின் வேர்களைத் 
தேடிப்பார்க்கிறேன் 
அடியும் தெரியவில்லை 
முடிவும் புரியவில்லை

போதனைகள் ஏட்டுச்
சுரைக்காய்களாய்ப்
போனதில் 
சாதனைகள் 
மழை நீர் மண்ணானதே
கண்ணீர் 
வற்றவில்லையே. 


 

 
    
 
  
 

  

No comments:

Post a Comment