Monday, April 2, 2012

என்றும் நீ என்னோடுதான்.

பார்த்தது ஒரு பெண் தான்
       பரவசமானேன்
ஈர்த்தது உன் கண்தான்
       எழில்ரசம் தான்
நீர்த்தது கனவுகள்
       நிலையிழந்தன உன்முன் 
வார்த்தது நினைவுகள்
       வசமிழந்தேன் நான்

தாயன்பு தனியன்பு
       கண்டேனே உன்னில் 
சேயன்பு சேர்ந்தன்பு
       கொண்டேனே கண்ணில்
வாயென்றும் வயிறென்றும்
       வளம்கண்ட என்னை
காயன்று கனிதானென்று
        கரைத்தாய் நீ

தெரியாமல் செய்திட்ட
        துன்பங்கள் ஒரு புறம்
புரியாமல் பேசிட்ட
         வன்மங்கள் மறுபுறம்
எரிதணலாய் மாறாமல்
         பொறுமை காத்தாய்
உரிமையில் உன் அன்பினை
          புரியவைத்தாய்

தனக்கென கேட்டிடா
          நல் தாயுள்ளம்
எனக்கென என்றிரா
          பொது உள்ளம்
பிணக்கென வந்திட்டால்
          வாதிடாமல்
மனக்குளத்தை வளமாக்கி
          வாழ்வாக்கும் நீ

தனம்பல பெற்று நான்
          தனித்தியங்கும் நிலை
மனம்நிறை மகிழ்ச்சியில்
          நீ மிளிர இப்போதேனும்
கானம்பாடி மன ஊஞ்சலில்
          களித்திருக்க
வானம்பாடியாய் வேண்டும்
          என்றும் நீ என்னோடுதான்.  




  


       
           



n

No comments:

Post a Comment